வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம்

6 0

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று வெள்ளிக்கிழமை (05) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் ஜே/226 மற்றும் காங்கேசன்துறை ஜே/233 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 29 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் இந்த அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.