21 வயதான இளைஞன் 04 மாதங்களாக மாயம்

14 0

ஹட்டன் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த 21 வயதுடைய இளைஞன் நான்கு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் தந்தையால் இது குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அட்டன் பஸ் நிலையத்தில் வடை உள்ளிட்ட சிறு உணவுப் பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் தனக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், மூத்த மகன் ஆர். மஹ்மூத் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தந்தை தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் வியாபாரத்திற்கு உதவப் போவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், இது தொடர்பில் தந்தை டிசம்பர் 15ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மகன் காணாமல் போனமை தொடர்பில் ஹட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளைத் தவிர, மகனைத் தேடி உறவினர் வீடுகளுக்குச் சென்றதாகவும், இதுவரை தனது மகன் தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் தந்தை கூறுகிறார்.

காணாமல் போன இளைஞன் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேனவிடம் வினவிய போது, ​​பொலிஸார் தற்போது பல பிரிவுகள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

குறித்த இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், ஹட்டன் பொலிஸாரின் 071 859 1117, 0512222222 அல்லது 05122222520 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பிரதான பொலிஸ் பரிசோதகர், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.