ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்த அரசாங்கம் ஆலோசனை

23 0

ஜனாதிபதி தேர்தலையும்,பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்த அரசாங்கம் ஆலோசிக்கிறது.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது பொதுஜன பெரமுனவுக்கு சாதகமாக அமையும்.ஆனால் நாட்டுக்கு பாதகமான நிலை தோற்றம் பெறும்.நாட்டின் நலனை கருத்திற் கொள்வதா? அல்லது பொதுஜன பெரமுனவின் நலனை கருத்திற் கொள்வதா? என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பதவிக்காலம் நிறைவு பெறும் வரை பாராளுமன்றத் தேர்தலை நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார்.ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரானதாக அமையும் என்பதால் தோல்வியின் எதிர்விளைவுகளை தடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த பஷில் ராஜபக்ஷ முயற்சிக்கிறார்.

2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கும்,பொதுத்தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.ஆகவே ஜனாதிபதி தேர்தலையும்,பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

ஜனாதிபதி தேர்தலையும்,பொதுத்தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு சட்ட சிக்கல்கள் ஏதும் கிடையாது.2024.07.14 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 04 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்களை பொறுப்பேற்கும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை தேர்தல்கள் அறிவிக்கும் தினத்தன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்தால் இரண்டு தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த முடியும்.

இரு தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தினால் அது ஜனாதிபதிக்கும்,பொதுஜன பெரமுனவுக்கும் சாதகமாக அமையும்.ஆனால் நாட்டுக்கு இது முக்கியமல்ல,இம்முறை எந்த அரசியல் கட்சியும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெறாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதிக வாக்குகளை பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

ஆனால் பாராளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிடின் சட்டமூலங்களையும்,ஒழுங்கு விதிகளையும் நிறைவேற்றிக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.அத்துடன் 21 ஆவது திருத்தத்துக்கு அமைய பலவீனமான பாராளுமன்றத்தையும் ஜனாதிபதியால் கலைக்க முடியாத நிலை ஏற்படும்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை தோற்றம் பெற்றால் பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒருபோதும் மீட்சியடைய முடியாத நிலை ஏற்படும்.

நாட்டுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் பரவாயில்லை தமக்கு சாதகமான நிலை ஏற்பட வேண்டும் என்ற நிலையில் இருந்துக் கொண்டு பொதுஜன பெரமுன செயற்படுகிறது.இதனால் தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை கோருகிறார்கள்.ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் கட்சியிடம் அரச அதிகாரம் காணப்படும் என்பதால் பொதுத்தேர்தலில் தமது செல்வாக்கு வலுவிழக்கும் என்பதை பொதுஜன பெரமுன நன்கு அறியும் என்பதால் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தலை கோருகிறார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டுமே தவிர பொதுஜன பெரமுனவின் நலன் குறித்து கவனம் செலுத்த கூடாது என்றார்.