ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று மேலவை இலங்கை கூட்டணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்பதால் ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலவை இலங்கை கூட்டணியின் அணுகுமுறை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் மேலவை இலங்கை கூட்டணியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ளார். இந்தத் தீர்மானத்தினை எடுத்தமைக்கு காரணம், தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சஜித்துக்கும் அநுரவுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இல்லை. அதேபோன்று தான் ரணில் விக்கிரமசிங்க இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் அவரும் போட்டியிடுவதாக அவருடைய தரப்பினர் கூறுகின்றார்கள்.
ஆகவே, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது அவர்கள் ஒரே நிலைப்பாடுகளை உடையவர்களாகவே உள்ளனர். ஆகவேதான் எமது கூட்டணியின் சார்பில் வேட்பாளரை களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதேநேரம், தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது தொடர்பில் எமக்கு ஆட்சேபனைகள் எதுவும் இல்லை. அதற்கான சகல உரித்துக்களும் அவர்களுக்கு உள்ளது என்றார்.

