பெரிய நீலாவணை இரட்டை படுகொலை : கைதான தந்தைக்கு விளக்கமறியல்!

29 0

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 14ஆம் திகதி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு இன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கொலை தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதை தொடர்ந்தே 63 வயதான சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.