கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்

28 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான 56 குடும்பங்களின் 59.5 ஏக்கர் காணியினை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் மேற்கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமையும் தங்கள் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு மக்கள் கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதியிடம் தங்கள் கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்து கேப்பாப்புலவு படைத்தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி நின்றவேளை இராணுவத்தளபதியினை சந்திக்க போராட்ட மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவ புலனாய்வாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதற்கமைய மாலை 3 மணிக்கு இராணுவத்தளபதியினை சந்திக்கவுள்ளதாக நேரம் கொடுத்து அதற்காக 5 நபர்களின் பெயர் விபரங்கள், அடையாள அட்டை இலக்கம் என்பன போராட்டக்காரர்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கவனயீர்ப்பினை நிறைவிற்கு கொண்டுவந்துள்ளார்கள்.

இந்நிலையில் மாலை 5 மணியளவில் கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் இருந்து உலங்கு வானூர்தி மூலம் இராணுவத்தளபதி வெளியேறியுள்ளதை அவதானிக்க முடிந்த அதேவேளையில் போராட்டக்காரர்களை இராணுவ தளபதியினை சந்திக்க அழைத்து சென்றுள்ளார்கள்.

அங்கு வன்னி பிராந்தியத்தின் உயர் அதிகாரி ஒருவரே இவர்களை சந்தித்துள்ளார். இரவு 7.45 மணிவரை சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது குறித்த இராணுவ உயர் அதிகாரி கேப்பாப்புலவு இராணுவமுகாம் அகற்றப்படாது என்றும் அந்த பகுதியில் உள்ள மக்களின் காணிகள் எவ்வளவு உள்ளதோ அவ்வளவு காணிகளை முகாமிற்கு அருகில் உள்ள பகுதிகளில் கொடுத்து வீடுகளை கட்டிதருவதாக தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவில் படை முகாம் இருக்கும் என்றும் மாற்றுக்காணி வழங்கவுள்ளதாகவும் அரசாங்கம் நிறைய செலவு செய்து படைமுகாமினை அமைத்துள்ளது என்றும்  அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கியுள்ளதாகவும் இராணுவ உயர் அதிகாரியுடன் பேச்சில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்

பேச்சுக்களில் கலந்துகொண்ட கேப்பாபிலவு மக்கள் இராணுவ அதிகாரியுடன் முரண்பட்ட நிலையில் எங்கள் காணிதான் எங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்து பேச்சுக்களை முடித்து வெளியேறியுள்ளதுடன், மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த அதிகாரி மட்டுமல்ல இன்னும் மேல் அதிகாரிகளுடன் கதைத்து முடிவு எடுக்க நேரகாலம் தேவை என்றும் அதற்கான காலஅவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளதாக பேச்சுக்களில் கலந்துகொண்ட கேப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்.