முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விபத்தில் மரணம்

22 0

வவுனியா, ஏ9 வீதியில் நேற்று (27) மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் இருந்து கடமை முடிந்து வவுனியா நோக்கி பயணித்த பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் வாகனம் வவுனியா, ஓமந்தை, கள்ளிக்குளம் சந்தியை கடந்து பயணித்த போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது டிப்பர் வாகனத்திற்கு முன்னே அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியும் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.

விபத்தில்  பணிப்பாளர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன், அவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

சம்பவத்தில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளரும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரனே உயிரிழந்தார்.

இதேவேளை, விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தின் சாரதி ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.