அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் அதற்கு எதிராக பொதுமக்கள் வீதிக்கு இறங்ககூடும்

40 0

அரசாங்கம் அரசமைப்பை மீறி ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்ககூடும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் அரசியல்கட்சிகளுக்கானதோ அரசாங்கத்திற்கானதோ அல்லது அரசியல் தலைவர்களிற்கானதோ இல்லை தேர்தல்கள் மக்களிற்கானவை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் நடைபெறவேண்டும் ஜனாதிபதியோ அமைச்சரவையோ பசில்ராஜபக்சவோ அதனை மாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு கடமை என தெரிவித்துள்ள பவ்ரல் அமைப்பின் ரோகண ஹெட்டியாராச்சி ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஏதாவது காரணத்திற்காக அரசமைப்பை மீறி செயற்பட முடிந்தால் வீதிக்கு இறங்குவதற்கான வலு எங்கள் மக்களுக்குள்ளது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.