பாடசாலை தினத்தை முன்னிட்டு தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

20 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்கள் பாடசாலை தொடங்கப்பட்டதன் நினைவாக 27ஆவது ஆண்டு பாடசாலை தினத்தினை முன்னிட்டு இன்று (25) காலை பாடசாலை மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இளம் சமூகத்தினர் குறிப்பாக கல்வி கற்கும் மாணவர்கள் போதையாலும், சமூக சீர்கேடுகளாலும் அழிந்துகொண்டு செல்கின்றார்கள். இவற்றில் இருந்து மாணவர்களை மீட்டு கல்வியினை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் கல்வியினை திட்டமிட்டு நசுக்குகின்ற கொடிய செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது; போதை எமக்கு வேண்டாம்; போதையில் இருந்து விடுபட்ட ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் ‘அழிக்காதே அழிக்காதே கல்வியை அழிக்காதே’, ‘பாதுகாப்போம் இயற்கை வளத்தினை பாதுகாப்போம்’, ‘இளவயது திருமணம் வேண்டாம் இளையோரே கொஞ்சம் கேளீர்’, ‘அழிக்காதே அழிக்காதே மாணவர்கள் கல்வியினை அழிக்காதே’, ‘ஒழிப்போம் ஒழிப்போம் சிறுவர் துஷ்பிரயோகத்தினை ஒழிப்போம்’, ‘சிறுவர்களின் உரிமையினை பாதுகாப்போம்’ உள்ளிட்ட கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.