மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்!

15 0

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்தார்.

விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரையும் பாதுகாக்கும் முறைமையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் பிரசித்தப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைப்பதற்கும், வரவிருக்கும் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு நாட்டை தயார்படுத்துவதற்கும் அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத்,

“விவசாய அமைச்சின் ஊடாக நெல் கொள்வனவு செய்வதற்கான சூழல் தற்போது தயாராகியுள்ளது. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல ஒரு முறைமை தயாராகி வருகிறது. அண்மைய காலமாக காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. விவசாய அமைச்சு என்ற வகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை பழைய நிலைக்கு கொண்டுவர முடிந்தது.

அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் புரதத் தேவைக்காக இறைச்சி மற்றும் முட்டைகளை உற்பத்தி செய்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. கால்நடை உற்பத்தியை அதிகரிக்க சுகாதார திணைக்களம் மற்றும் 09 மாகாண சபைகள் இணைந்து கால்நடை வளர்ப்பின் தரத்தை உயர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

 

மேலும், பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க 06 தொழிற்சாலைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இதுவரை 03 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. வீழ்ச்சியடைந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். அந்த நாடு இன்று மக்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடு இன்றி நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் விவசாயக் கொள்கை மூலம் நுகர்வுக்கு தேவையான அரிசியை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

 

இதன்படி அடுத்த மாதம் 6 ஆம் திகதி தேசிய புத்தரிசி விழாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்ரீ மஹா போதி முன்னிலையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று. கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் மேலும் தெரிவித்தார்.

 

தற்போதைய ஜனாதிபதியால் வங்குரோத்து நாட்டையும் வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்ட நாட்டையும் மீட்டெடுக்க முடிந்தது. மக்களை வாழ வைக்கும் சவாலையும், எதிர்காலத்திற்கு ஏற்ற இளம் தலைமுறையை உருவாக்கும் பொறுப்பையும் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. மேலும், தற்போது முதியோர்களை பராமரித்தல், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற விடயங்களுக்காக “அஸ்வெசும” உள்ளிட்ட நலன்புரித் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.