மட்டக்களப்பில் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிசங்குடன் ஒருவர் கைது

21 0

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக வலம்புரி சங்குகளை விற்பனை செய்ய முயன்ற பூசகர் ஒருவரை சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளுடன்  செவ்வாய்க்கிழமை (19) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து  விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் பெறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த ஆலய பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது வலம்புரிசங்குகளை விற்பனை செய்ய முயன்ற பூசகரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிச் சங்குகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய பூசகரையும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களையும் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.