வவுனியாவில் பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு : சாரதி கைது

20 0

வவுனியா, பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்ட முதியவரை பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து குறித்த தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் அந்த பேருந்தில் ஏறுவதற்காக வீதியின் மறுபக்கத்திலிருந்து பேருந்தின்  முன்பக்கமாக வந்த முதியவர் ஒருவர் பேருந்தில் ஏற முற்பட்டுள்ளார்.

அந்நேரத்தில் பேருந்தை சாரதி செலுத்தியமையால் மேற்படி முதியவர் மீது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் பேருந்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் பேருந்தை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்துக்குப் பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.இந்த விபத்தில் பூவரசங்குளம், மணியர்குளம் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடயை சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்தவராவார்.