திருகோணமலை-புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம் பெற்றுள்ளது.
இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை – கோனேஸபுரி ஆறாம் கட்டையைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் 21, 30, 39 வயது உடையவர்களை எனவும் உயிரிழந்தவருடன் பயணித்த இளைஞர் உட்பட மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் மொத்தமாக நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

