கனடா: தீ விபத்தில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் பலி: சந்தேக வழக்குப் பதிந்து போலீஸ் விசாரணை

23 0

கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் மார்ச் 7ம் தேதி நடந்ததுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சந்தேக மரணம் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அந்த இந்திய வம்சாவளி குடும்பம் பிராம்டன் பகுதியின் பிக் ஸ்கை வே மற்றும் வான் கிர்க் டிரைவில் வசித்து வந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள், ராஜீவ் வாரிகோ(51), அவரது மனைவி ஷில்பா கோத்தா(47) மற்றும் அவர்களுது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீஸார் கூறுகையில், “விபத்து ஏற்பட்ட வீட்டின் அருகில் வசிப்பவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு நாங்கள் சென்றோம். ஆனாலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உடனடியாக கண்டறிய முடியவில்லை. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னர் மூன்று மனித உடல்கள் கண்டறியப்பட்டன” என்று தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்துக்கான காரணத்தை போலீஸார் இன்னும் கண்டறியவில்லை என்றும், சந்தேகத்துக்குரிய விபத்து இது என்று கூறியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த காவல்துறை அறிக்கையில், “இந்த வழக்கை நாங்கள் எங்களின் கொலை விசாரணை அமைப்பு மூலம் விசாரித்து வருகிறோம். இந்த தீ விபத்து தற்செயலானது இல்லை என்று ஒண்டோரியோ தீயணைப்பு அதிகாரி கருதியது போல, நாங்களும் இந்த தீ விபத்து சந்தேகத்துக்குரியதாகவே கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்த ஊடக அறிக்கையில், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த வழக்கில் தொடந்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்த விவரம் தெரிந்தவர்கள் தகவல் தர முன்வர வேண்டும் என்றும் போலீஸார் வலியுறுத்தி உள்ளனர்” என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.