தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை

22 0

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.சர்வதேச நாணய  நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாத்திரம் செயற்பட்டால் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் மிகுதியாகும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹரக பகுதியில் சனிக்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொணடு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்தோம்.பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வகிக்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை செயற்படுத்துவதை மாத்திரம் அரசாங்கம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.வரிகளை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.நடுத்தர மக்களை பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள்ளாக்கி நாடு என்ற ரீதியில் அபிவிருத்தியடைய முடியாது.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் எதனையும் அரசாங்கம் செயற்படுத்துவதில்லை.கடன் பெறுவதை மாத்திரமே இலக்காகக் கொண்டுள்ளது.இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்போம் என்றார்.