காடுகளுக்கு தீ மூட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

100 0

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையை பயன்படுத்திக்கொண்டு சிலர் காடுகளுக்கு தீமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறானவர்களை கைது செய்து சட்டத்துக்கு நிறுத்துமாறு பொலிஸாருக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில தற்போது வரட்சியான காலநிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேபோன்று விவசாய பிரதேசங்களும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வருகிறது.

இந்த வரட்சியான காலநிலை ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் எனவும் அதன் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக காலநிலை மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு இடம்பெறும் பிரதேசங்களுக்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.

அதேபோன்று வரட்சியான காலநிலையை பயன்படுத்திக்கொண்டு சிலர் காடுகளுக்கு தீ மூட்டும் நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டவிராேதமான செயலாகும்.

அவ்வாறான சம்பவங்கள் சில கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ளமை தொடர்பில் எமக்கு அறியக்கிடைத்திருக்கிறது. ஒரு சில இடங்களில் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் போது அதனை முப்படைகளின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

அத்துடன் காடுகளுக்கு தீ மூட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைதுசெய்ய பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறோம்.

அதேபோன்று சிலர் காட்டு விளங்குகளை வேட்டையாடுவதற்காக தீ மூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது பாரிய விளைவுகளை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அத்துடன் காடுகளுக்கு தீ மூட்டுவதன் மூலம் மழை பெய்யும் என்ற  மூட நம்பிக்கையில் இவ்வாறு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறு இருந்தாலும் காடுகளுக்கு தீ மூட்டுவது குற்றச்செயலாகும். அதனால் காடுகளுக்கு தீ மூட்டும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். என்றார்.