மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்

113 0

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக இருந்த பா.ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல்ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை பதவியேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை என்று தமிழக அரசு உயர்த்தியது. இந்த சூழலில், ஏற்கெனவே மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிக்குமார் கடந்த மார்ச் 9-ம் தேதி ஓய்வு பெற்றார்.

மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அப்பதவியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக உள்ள பா.ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிக்கை நேற்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பா.ஜோதி நிர்மலாசாமியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஆளுநர் நியமித்துள்ளார்.

இவர் பதவியேற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதி நிர்மலாசாமி வரும் மே மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.