சர்வதேச மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்

20 0

சர்வதேச மகளிர் தினமான இன்று (08) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தின் ஏழு வருட பூர்த்திக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று இப்போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த உறவினர்கள், தெற்குப் பகுதியில் இருந்து வருகை தந்த மதகுரு செறாட் ஜெயவர்த்தன உள்ளிட்ட குழுவினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன்போது ‘இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்’, ‘நீதி தேவதை ஏன் கண்மூடிவிட்டாய்?’, ‘சர்வதேசமே இன்று பெண்கள் தினமா? பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?’, ‘முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா?’, ’55ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா?’, ‘கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்’, ‘பெண்கள் நாட்டின் கண்களா? இல்லை கண்ணீருக்காக கண்களா?’ போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.