மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத ஜூஸ் விற்பனை செய்த கம்பனி முகாமையாளர், முகவர் மற்றும் விற்பனை செய்த வர்த்தகர் ஆகிய மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் வியாழக்கிழமை (7) உத்தரவிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருக்கும் அந்த ஜூஸ் போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையிலான கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் த.மிதுனராஜ். எஸ்.அமிர்தாப், ஜே.யசோதரன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் வர்தக நிலையங்களை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது ஒரு வர்த்தக நிலையத்தில் ஜூஸ் போத்தல்களை கைப்பற்றி அதனை கொழும்பிலுள்ள பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பியது.
அதில் தரம் குறைந்த, நியமத்திற்கு மேலதிகமான சல்பர்டைஒக்சைட்டும் (Sulphurdioxide) செயற்கையான நிறமூட்டும் பதார்தமான கார்மோசின், சன்ட்செட் மஞ்சள் (Carmosine – Suntset yellow & Tarazine ) அதிகமாக கலந்துள்ளதாக பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இது மனித பாவனைக்கு உகந்தல்ல என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த ஜூஸ் உற்பத்தி கம்பனி முகாமையாளர், விற்பனை முகவர், வர்த்தகர் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதார உத்தியோகத்தர் மிதுனராஜ் வியாழக்கிழமை (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததையடுத்து நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இதன் போது ஜூஸ் விற்பனை செய்த வர்த்தகரை 20 ஆயிரம் ரூபாவும், முகவரை 20 ஆயிரம் ரூபாவையும் பழச்சாறு உற்பத்தி கம்பனி முகாமையாளரை 40 ஆயிரம் ரூபாவுமாக 80 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் குறித்த ஜூஸ் பேத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளையிட்டார்.

