தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லனவின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி பகல் உணவு நேரத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகச் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியர் ருக்க்ஷான் பெல்லனவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தேசிய வைத்தியசாலையின் தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்ய பொலிஸார் தற்போது முயற்சித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன நேற்று (07) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சுகாதார ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ருக்க்ஷான் பெல்லான, கனிஷ்ட சுகாதார ஊழியர்களைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

