மன்னாரில் தென்னை மரங்களை தாக்கும் ‘வெண் ஈ’க்கள் அதிகரிப்பு

24 0

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தென்னை செய்கையில் ‘வெண் ஈ’யின் தாக்கம்  அதிகரித்துள்ள நிலையில், வெண் ஈ பரவலை கட்டுப்படுத்த முடியாது.

இலைகளின் பின்புறம் இச்சிறிய ஒரு சோடி இறக்கை கொண்ட கொசுவின் அளவுடைய ஈக்கள் வாரம் 100 முட்டைகளையிட்டு, தென்னை ஓலையின் பச்சயத்தை சாப்பிடுவதால் ஓலைகள் காய்ந்து, கொக்கு, காகம் எச்சமிட்டதை போன்று வெண்மை படர்ந்த தோற்றத்தில் காணப்படுகிறது.

இதன் எச்சங்கள் நாவல், கறுப்பு நிறமாக தென்னையின் கீழுள்ள மரங்களின் இலைகளில் விழுவதனால் அவை முதலில் கரும்புள்ளியாக மாறி பின்பு பூஞ்சன நோயின் தாக்கத்தினால் மண்ணிறமாக காய்ந்து காணப்படும்.

சிலர் வெண்ணிற ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஓலைகளை முழுமையாக வெட்டி எரித்துவிடுகின்றனர். ஆனால், ஒரு பாலையும் ஓலையும் ஒரு மாதத்தில் உருவாகிறது. தென்னை காய்ப்பதற்கு குறைந்தது 10-15 ஓலைகள் அவசியம். எனவே ஓலைகளை வெட்டுவது பெரும் பாதிப்பையும் நட்டத்தையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக, தென்னை மரங்களில் அதிகம் பரவியிருந்த வெண் ஈக்கள் தற்போது அனைத்து வகையான தாவரங்களிலும் பரவியுள்ளதோடு அதிகளவு இனப்பெருக்கம் செய்கின்றன.

எனவே, வெண் ஈக்களின் பரவல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு ஓய்வு பெற்ற விவசாய சிரேஷ்ட அதிகாரி பீற்றர் சிங்கிலயர் தெரிவித்துள்ளார்.

இந்த ஈக்கள் வாகனங்கள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவக்கூடியவை. எனவே, அரசாங்கம் இந்த நோய் தாக்கத்தை சாதாரண ஒன்றாக கடந்து செல்லாமல், தேசிய அனர்த்தமாக கருதி கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.