சாணக்கியனை ரோஹித அபேகுணவர்தன அச்சுறுத்தல் விடுத்து தாக்க முற்பட்டார் !

125 0

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பிரதமர் அலுவலகத்தில் வைத்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்து, தாக்குவதற்கு முற்பட்டார். இவரது செயற்பாடுகளினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. ஆகவே இச்சம்பவம் தொடர்பில் சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில்  ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ‘நீங்கள் ஏன் எங்களின் பிரதமரை சந்திக்க  வந்துள்ளீர்கள்’ என்றார் அவர் உங்களின் பிரதமர் அல்ல இலங்கையின் பிரதமர்’ என்று நான் குறிப்பிட்டேன். இதன்போது அவர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்து தாக்குவதற்கு முற்பட்டார். பிரதமர் அலுவலகத்தின் சேவையாளர்கள், இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த பியங்கர சாட்சி. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன முறையற்ற வகையில் நடந்துக் கொண்டார். எமது பிரதமர் எமது பிரதமர் என்று குறிப்பிட்டுக் கொண்டு ‘நீ என்ன சொல்லுகிறாய்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு என்னை நெருங்கி வந்தார். எனக்கும் சண்டித்தனம் செய்ய முடியும். ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும்.நாங்கள் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம்.

நான் தமிழ் உறுப்பினராக இருப்பதால் ‘எமது பிரதமரை எவ்வாறு சந்திக்க முடியும்’  குறிப்பிட்டு என்னை அவர் அச்சுறுத்தினார். இதுவா நல்லிணக்கத்துக்கு வழங்கும் செய்தி. இது பாரதூரமானதொரு சம்பவம். எனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது.வெளியில் எனது உயிருக்கும் இவரால் அச்சுறுத்தல் காணப்படுகிறது. எனது சிறப்புரிமை மற்றும் பேச்சு மற்றும் கருத்து உரிமை மீறப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் தமிழ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டும் இது தொடர்கிறது.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி  சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ’இந்த கோரிக்கை தொடர்பில்  சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ‘குறிப்பிட்டார்.