சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை!

116 0

பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை விடுவித்து விடுதலை செய்யுமாறு கடுவெல நீதிவான் சனிமா விஜயபண்டார இன்று (05) உத்தரவிட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் இடம்பெற்ற போராட்டத்தின்போது நாட்டின் நிலைமை குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கச் சென்ற 13 சமூக ஆர்வலர்கள்  தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  மஹரகம பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு பின்னர்  கடுவலை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக  ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை  உருவாக்குதல்,  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.