12 ஆண்டுகளாக மட்டக்களப்பு ஆயரை காணவில்லை! பொதுமக்கள் உண்ணாவிரதம்

42 0

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு புனித யூதாதையர்  தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்குமாறு தாம் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்தும் அவர் இதுவரையில் சந்திக்காத காரணத்தினால் உடனடியாக ஆயர் தம்மை நேரில் வந்து சந்தித்து தமது பிரச்சனைகளைக் கேட்டறியும் வரை உண்ணாவிரதத்தில் தேற்றாத்தீவு புனித யூதாதையர் மக்கள் ஈடுபட்டள்ளனர்.

இந்நிலையில், இப்பங்கு மக்களுக்கு தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலம் தான் முக்கியமானதாகும். இதன்  வளர்ச்சிதான் எமக்குத் தேவை. இவைகள் அனைத்தையும் முன்வைத்து நாம் ஆயருடன் கதைப்பதற்கு வருமாறு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

எனவே ஆயர் வந்து எமது குறைபாடுகளைக் கேட்டறியும் வரையில் எமது உண்ணாவிரதம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்தின் நிருவாகக் குரு அருட் தந்தை ஆர்.திருச்செல்வம்,

“ஞாயிற்றுக்கிழமை (03.03.2024) காலை நான் பழுகாமத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்குச் சென்று விட்டு தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்திற்கு வந்து பார்க்கும் போது ஆலயத்தின் முன்னால் சிலர் உண்ணாவிரத்தில் இருப்பதாக அறிந்தேன்.

இந்த உண்ணாவிரதத்திற்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை. எமது ஆயர் வரவேண்டும் என அந்த மக்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பிரகாரம் இதுபற்றி நான் ஆயரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன்.

அந்த வகையில் ஆயர் இங்கு வந்து மக்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். அவ்வாறு தெரிவித்த பின்னரும் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வது வேதனையளிக்கின்றது. இது ஆலயத்திற்கு நல்ல செயற்பாடு இல்லை.

எனவே மக்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்யாமல் அமைதியான முறையில் என்னைச் சந்தித்திருக்க வேண்டும்.ஆயரின் பதிலை ஏற்கனவே மக்களுக்குத் தெரிவித்த பின்னரும் அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கின்றார்கள் என்பதையிட்டு கவலையடைகின்றேன்” என்றார்.