சாந்தனின் இறுக்கிரியைகள் நாளை

54 0

நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று மாலையில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் இழுபறிகள் காணப்பட்ட நிலையில் சகல பரிசோதனைகளும் நிறைவுபெற்று உடல் கையளிக்கப்பட்டதாக சாந்தனின் சகோதரர் தில்லையம்பலம் மதிசுதா தெரிவித்தார்.

இதேநேரம், சாந்தனின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் இன்றையதினத்தின தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

நேற்றையதினம் பொது அமைப்புக்கள் ஒன்று கூடி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் நாளை தினம் தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து அமரர் சாந்தனிற்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், சாந்தனின் பூதவுடன் இன்று காலை 8மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் பூதவுடல் நாளை திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளை களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.