முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு – உரும்பிராயில் சம்பவம்

47 0

பாதசாரி கடவைக்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை (1) வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அருமைநாயகம் (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வெள்ளிக்கிழமை (1) காலை குறித்த முதியவர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் குப்பையை கொட்டிவிட்டு வீட்டுக்கு வருவதற்காக வீதியைக் கடக்க முற்பட்டபோது, பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.