யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

50 0

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதிகளில் இரவு வேளைகளில் வீதியில் பயணிப்பவர்களை இலக்கு வைத்து, வழிப்பறி கொள்ளையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

குறிப்பாக சன நடமாட்டம் குறைந்த , வீதி மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் மறைந்திருந்து , தனித்து மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சர வண்டிகளில் வருபவர்களை வழி மறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்கள் பெருந்தொகையான பணத்தையோ , பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்காது , பண பையில் உள்ள பணத்தினை மாத்திரம் கொள்ளையடிப்பதால் , பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் முறைப்பாடுகளை செய்யாது தவிர்த்துள்ளனர்.

அவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்தி நீண்ட காலமாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.