காஸா சிறுவர் நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 11க்கு முன்னர் வழங்கவும்

17 0

காஸா சிறுவர் நிதியத்துக்காக சேர்க்கப்படும்  நன்கொடை எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கையளிக்க இருக்கிறோம். அதனால் நன்கொடை  செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னர் கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காஸாவில் இடம்பெற்றுவரும் வன்முறை காரணமாக அங்குள்ள சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அங்குள்ள சிறுவர்களை கருத்திற்கொண்டு காஸா சிறுவர்களுக்கான நிதியம் அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதுதொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது.

எதிர்வரும் ரமழான் பண்டிகையின் போது காஸா சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்குவததை இலக்காக்ககொண்டே இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில்  அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் எதிர்வரும் ரமழானில் இப்தார் நிகழ்ச்சிகளை நிறுத்தி, அந்த பணத்தை இந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நிதியத்திற்கு பங்களிப்பு செய்ய தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வர வேண்டும். காஸாவில் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் அங்கு இடம்பெற்று வரும் மோதல் காரணமாக பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அடிப்படை தேவைகளுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.  பாதிக்கப்பட்டுவரும் சிறுவர்களுக்கு நன்கொடை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் டொலரை ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

எனவே இந்த நிதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி இடம்பெற இருக்கும்  ரமழான் பண்டிகைக்குக் கையளிக்கப்பட இருக்கிறது. அதனால் காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் ஏபரல் 11ஆம் திகதிக்கு முன்னர் தங்களது நன்கொடைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.