கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு தேயிலை, இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று (28) இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் இ.தொ.கா பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும், சம்பள நிர்ணய சபையில் கோரிக்கைகளை எவ்வாறு முன்வைக்க வேண்டும் என்பது பற்றியும் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில் இ.தொ.கா சார்பில் தேயிலை உற்பத்திக்கான சம்பள சபையின் அங்கத்தவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, இறப்பர் பயிரிடல் பதனிடல் சம்பள சபைக்கான அங்கத்தவரும் உப தலைவருமான எஸ்.இராஜமணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகச் செயலாளர் எஸ்.பி. விஜயகுமார், ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பி.ஜி. சந்திரசேன, செங்கோடி சங்கத்தின் சார்பில் வி.ராஜலக்சுமி, ஸ்ரீலங்கா பொதுஜன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிறிமான ஹெட்டிகே சாந்த, ஜே.எஸ்.எஸ். சங்கத்தின் சார்பில் ஜே.ஏ.டி. நிஸாந்த புஸ்பகுமார ஆகியோர் அங்கம் வகித்தனர்.



