தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் வீச்சுடன் கலைத்திறன்- 2024 கிறேபெல்ட்

313 0

17.02.2024ஆம் நாளன்று வானம் வெளித்த காலைப்பொழுதில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென உற்சாகத்தோடு வருகை தர, அவர்களை நெறிப்படுத்தி அணியமாவதற்கான ஒழுங்குகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் மாநிலச் செயற்பாட்டாளர்கள் வழிகாட்டினர். மறுபுறமாக நிர்வாகிகள், தாயமைப்பு மற்றும் துணையமைப்புகளின் கோட்ட, மாநில மற்றும் நாடுதழுவிய மட்டத்திலான பொறுப்பாளர்களும் இணைந்துகொள்ள 09:00 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றலோடு மத்திய மாநிலத் தமிழாலயங்களிடையேயான கலைத்திறன் போட்டி தொடங்கியது.

மங்கலவிளக்கேற்றல்,அகவணக்கம், தமிழாலயகீதம் மற்றும் வரவேற்புரை என்று தொடர்ந்த தொடக்க நிகழ்வுகள் நிறைவுறப் போட்டிகள் தொடங்கியது. தமிழர் கலைகளில் தேர்வு செய்யப்பட்ட கலைகளோடு மாணவர்கள் போட்டிகளிற் பங்குபற்றித் தமது கலைத்திறனை வெளிப்படுத்தியமை சிறப்பு. குழுநிலைப் போட்டிகள், தனியொருவருக்கான பாடற்போட்டிகள் எனத் திட்டமிட்டவாறு இரு அரங்குகளிற் சிறப்பாக நடைபெற்ற போட்டிகளிற் பங்கேற்றமைக்காக, ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு தொடர்ந்த போட்டியில் எம் தானைத் தலைவனின் புகழ்கூறும் நடனங்களின்போது மக்கள் உணர்வெழுச்சியோடு ஒன்றித்திருந்த காட்சியானது தமிழ் உறவுகள் தாயகன் மீது கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாட்டையும் பிரதிபலித்தது.

தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியிலே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களது ஈடுபாடும் அவர்களை நெறிப்படுத்திவரும் நிர்வாகத்தினர், ஆசிரியர்களோடு ஆங்காங்கே இலைமறைகாயாகத் தமிழாலயப் பெற்றோரிடையே இருக்கும் கலை வளவாளர்களென அனைவரினதும் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியின் பயனாகத் தமிழாலய மாணவர்களிடையே உள்ள வளரிளம் தமிழர்கள் கற்றலுக்கப்பாலான கலைவெளிப்பாடுகளின் வழியாகவும் தமிழைக் கற்பதற்கானதொரு களமாகவும் கலைத்திறன் இருப்பதை அரங்கம் வந்த நாடகப்போட்டி பதிவுசெய்தது. போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.
மத்திய மாநிலத் தமிழாலயங்களிடையேயான போட்டிகளிற் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று நிலைகளையும் முறையே தமிழாலயம் கிறேபெல்ட், தமிழாலயம் முன்சன்கிளாட்பாக் மற்றும் தமிழாலயம் நொய்ஸ் ஆகியன பெற்றுக்கொண்டன. அவர்களை அரங்கிற்கு அழைத்துச் சிறப்புப் பாராட்டு மடல் வழங்கி வாழ்த்துகளும் பகிரப்பட்டன. இத்தமிழாலயங்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா அரங்கில் வழங்கப்படவுள்ளது. நிறைவாகத் தாயக விடியல் மீதான பற்றுறுதியுடனான நம்பிக்கையைத் தொட்டவாறு கலைத்திறன் போட்டி சிறப்பாக நிறைவுற்றது.

தென், தென்மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களுக்கான கலைத்திறன் போட்டியைத் தொடர்ந்து 24.02.2024 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்துக்கான போட்டி கற்றிங்கன் நகரில் நடைபெறவுள்ளது. 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த வடமாநிலத்துக்கான கலைத்திறன் போட்டி மார்ச் மாதத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளது. வடமாநிலத் தமிழாலயங்களிடையேயான போட்டி விவரம் விரைவில் அறியத்தரப்படும். மேலதிக விவரங்களைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் இணையத்தளமான வடிஎபநசஅயலெ.உழஅ பார்த்தும் அறிந்துகொள்ளலாம்.