உறுதியானது அதிமுக – பாமக கூட்டணி: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

26 0

மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக – பாமக இடையே கூட்டணி உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின. இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை நேரிலும், தொலைபேசியிலும் பேச்சு வார்த்தையை நடத்தினர். மேலும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக திட்டமிட்டுள்ளது.

இதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சியுடன் கூட்டணி அமைப்பதுஎன முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடவுள்ளன.

இது தொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2026-ல் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, இந்த மக்களவைத் தேர்தலில் மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் சரியாக இருக்கும். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறோம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன.

இந்த முறை தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி ), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு தெரிவித்தனர்.