உக்குவாவை கொலை செய்த சந்தேக நபர் கைது!

30 0

மஹாபாகே பிரதேசத்தில் பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (24) காலை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் செங்கலடி இராணுவ முகாமில் உள்ள 4 வது கமுனு ஹேவா படைப்பிரிவில் கடமையாற்றும் கோப்ரல் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – செங்கலடி முகாமில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபரை கைது செய்ய செல்லும் போது சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சந்தேக நபரை அம்பாறை பகுதியில் வைத்து கைது செய்தனர்.

பெப்ரவரி 21 ஆம் திகதி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் ‘வெல்லே சாரங்க’வின் உறவினரான ‘உக்குவா’, திட்டமிட்ட குற்றவாளியாகக் கருதப்படும் ‘டுபாய் நிபுன’ குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதான பிரதான சந்தேக நபரும் மேலும் இரு முன்னாள் இராணுவ வீரர்களும் அங்கு சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.