சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி!

28 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.

முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது.

மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.