தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மனித, விலங்குகள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில், அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் மனித ,விலங்குகள் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மனித , விலங்குகள் மோதலுக்கு வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு, வனப்பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்தல், யானைகள் வலம் வரும் பகுதிகள் மனிதர்களால் அழிக்கப்படுதல் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட இந்தத் தவறுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவற்றின் மூலம் இதுவரை எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை, இனி கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை.
மனித, விலங்குகள் மோதலால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருள் இழப்புகளும் மிக அதிகமாக ஏற்படுகின்றன. ஜனவரி 17 ஆம் நாள் முதல் பிப்ரவரி 19 வரையிலான 32 நாட்களில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் தாக்கி மூன்று பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் இறந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் புலிகள் மற்றும் யானைகள் தாக்கி 1700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தமிழகத்தில் யானைகள் தாக்குதலில் மட்டும் 152 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
மற்றொருபுறம் வன விலங்குகள் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. விலங்குகள் தாக்குதலில் கொல்லப்படுவோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், விலங்குகளால் கொல்லப்படும் உயிர்களுக்கும், சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. சில பகுதிகளில் முதல்கட்ட இழப்பீட்டை மட்டும் வழங்கும் தமிழக அரசு, மீதத் தொகையை வழங்கவில்லை.
வன விலங்குகளால் மக்களும், பயிர்களும் அழிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை விட, வன விலங்குகளால் மனிதர்களும், பயிர்களும் தாக்கப்படுவதை தடுப்பது தான் சிறந்தத் தீர்வாக இருக்கும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருவதை உடனடியாக தடுப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை.

