பொருளாதார நெருக்கடியினால் நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டு காலமாக மகிழ்ச்சியுடன் பண்டிகைகளைக் கொண்டாடவில்லை.இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். இந்த பணிவான கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத்திய வங்கியின் ஆளுநரின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்ட வேளையில் அவர் தான் பொருளாதார மீட்சிக்கான பொறுப்பை ஏற்றார்.ஆகவே கடந்து வந்த பாதையை மறந்து விடக் கூடாது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு தற்போது மீண்டுள்ளது.தற்போதைய முன்னேற்றத்தைத் தொடர வேண்டும்.
பொருளாதாரம் முன்னேற்றமடைந்ததன் பின்னர் அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்.கூட்டத்தை கூட்டுவதால் ஜனாதிபதியாகி விட முடியாது என்பதை எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.எமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்பதில் மாற்றமில்லை.
பொருளாதார பாதிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டுக் காலமாக நிம்மதியாக இல்லை.மகிழ்ச்சியுடன் பண்டிகைகளைப் புத்தாண்டை கொண்டாடவுமில்லை.
மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளன.
நாடு தற்போது நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளது.ஆகவே இம்முறை சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளைக் குறைக்க வேண்டும்.ஆகவே இந்த பணிவான வேண்டுகோளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என்றார்.

