மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் களுதாவளை, களுவாஞ்சிக்குடி, தேற்றாத்தீவு, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,
பகல் வேளைகளில் கிராமங்களுக்குள் கூட்டங்கூட்டமாக வரும் குரங்குகள் பிரதேச மக்களின் வீட்டுக் கூரைகளின் மேல் தாவித் திரிவதனால் கூரைகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு உடைகின்றன. இதனால் மழைக் காலங்களில் நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றோம்.
அத்தோடு, குடியிருப்புக்குள் காணப்படும் வாழை, மா, கொய்யா உள்ளிட்ட பயன் தரும் பயிரினங்களையும் சேதப்படுத்தி அழிக்கின்றன.
பகலில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வேளையிலே வீடுகளுக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது குடிமனைகளை குரங்குகள் மிகவும் அலங்கோலமாக சேதப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தை கருத்திற்கொண்டு மக்கள் குடியிருப்புக்குள் வந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

