இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல. இறையாண்மையுடைய சுயாதீனமான எமது நாட்டின் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே, சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமையும் காணப்படுகிறது என அரசாங்கம் அமெரிக்க தூதுவருக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் தொடர்பில் கவலை வெளியிடுவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஊடகப் பிரதானிகள், ஊடகவியலாளர் மற்றும் சிவில் சமூக அமைப்பினருடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை என்பது அமெரிக்காவின் பிராந்தியமல்ல. எமது நாடு இறையாண்மையுடைய சுயாதீன நாடாகும். எனவே எமது நாட்டுக்குள் அரசியலமைப்பு சபையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமை சட்டத்தை தயாரிக்கும் நிறுவனமான பாராளுமன்றத்துக்கே உரியது.
அதற்கமைய இது தொடர்பான திருத்தங்கள் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அவை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் 14 நாட்களுக்குள் நீதிமன்றத்தை நாட முடியும். நீதிமன்றம் அவை தொடர்பில் பரிசீலனை செய்து, திருத்தங்களை பரிந்துரைக்கும்.
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது. எவ்வாறிருப்பினும் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் ஏற்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான தேவை அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. தனிநபர் பாதிப்பு உள்ளிட்டவற்றை தவிர்ப்பதே இந்த சட்ட மூலத்தின் நோக்கமாகும்.
எனவே எந்தவொரு பிரஜைக்கும் சமூக வலைத்தளத்தின் ஊடாக தத்தமது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றார்.

