முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் விடுதலைப்புலிகளின் தங்கங்களைத் தேடி வேட்டை !

28 0

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தர்மபுரம்  பொலிஸார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை ( 19) குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காத நிலையில் மேலும் பல பகுதிகளை தோண்டி பார்ப்பதற்கு இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (20) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வு முன்னெடுப்பதற்காக வீதிகள் மற்றும் குறித்த காணியினை சூழ அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் பொலீசார்,சிறப்பு அதிரடிப்படையினர் தடயவியல் பொலீசார்,நீதிமன்ற உத்தியோகத்தர்கள்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,தொல்பொருள் திணைக்களத்தினர்,கிராம அலுவலகர்,உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் கூடிநின்ற நிலையில் உள் செல்வதற்கான அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் குறித்த இடத்தில் பிரசன்னமாகி இருந்தார்கள்.

குறித்த பகுதியில் அமையப்பெற்ற வீட்டின் உட்பகுதியில் விடுதலைப்புலிகளால் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் தற்போது அரைக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் ஒரு அறையின் ஒருபகுதியில் நிலத்தில்  சுமார் 4 அடிவரை நேற்று தோண்டப்பட்டுள்ளது.

எனினும் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று இரண்டாவது நாளாக கனரக இயந்திரம்கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.