‘13’ அமுலாக்குமாறு பிரதமர் மோடி முதல் அனைவரும் வலியுறுத்தி வருகின்றோம்

132 0

இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக அமுலாக்குவதோடு 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் நடைமுறைப்படுத்துமாறு எமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாம் அனைவரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்பதை உணர்கின்றோம் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடினார்.

குறித்த சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநதன், சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும்  வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி.சர்வவேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட புத்திஜீவிகளும் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில், இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக,இந்திய இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களையும் அவர்களது பூர்வீகத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும்.

அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சார்பில் இந்தியாவே கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் அந்த ஒப்பந்தத்தினை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

அதுமட்டுமன்றி, குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு காலத்தை இழுத்தடித்து வருகின்றது.

இதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தலைகள் நடத்தப்படாது தற்போது அவை இயங்காத நிலைமைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்தியா இந்த விடயங்களில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பெருவாரியாக கைகொடுத்து வருகின்ற நிலையில் அவற்றைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ் மக்களின் சுதந்திரம், சமத்துவம், சகவாழ்வு சம்பந்தமாக நாம் ஆழமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.

எமது பிரதமர் நரேந்திரமோடி, நேரடியாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மறுதலிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. எனினும் நாம் தொடர்சியாக அந்த விடயத்தில் கவனம் செலுத்வோம் என்றார்.

இதனையடுத்து, அவர், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் எழுச்சிக்கு தமது அர்ப்பணிப்பான பங்களிப்பு தொடரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக, வடக்கு,கிழக்குக்கும் இந்தியாவுக்கும் நீண்டகாலமான பிணைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தப் பிணைப்புக்களின் அடிப்படையில், இந்தியா குறித்த பகுதியின் மீள் எழுச்சியில் பாரிய கவனம் செலுத்துவதோடு, தொடர்ச்சியான பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, மீண்டும் அச்சந்திப்பில் பங்கேற்றிருந்தவர்களால், மாகாண சபைகள் இயங்காத நிலையிலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காத நிலையிலும், புலம்பெயர் தமிழர்கள் நேரடியான முதலீடுகளை மேற்கொள்வதில் தொடர்ச்சியான தயக்கங்களை காண்பிக்கின்றார்கள்.

இதனால், வடக்கு மாகாணத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான விடயங்கள் போதிய அளவில் மேம்படுத்தப்படாத நிலைமைகள் இருக்கின்றன என்ற விடயத்தினை வெளிப்படுத்தினார்கள்.

அதன்போது, உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மக்களினது சுதந்திரம் அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததோடு, புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளும் வடக்கின் மேம்பாட்டிற்கு அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் இந்தியா தனது வகிபாகத்தினை அர்ப்பணிப்புடன் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.இதேநேரம், இலங்கை, இந்திய மீனவர்கள் விவகாரம் சம்பந்தமாக புத்திஜீவி ஒருவர் வினாத்தொடுத்திருந்தார்.

அதன்போது, உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்த விடயத்தில் பொருத்தமான இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக தெரிவித்ததோடு, தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகள் பிரச்சினைக்கு அப்பால், வடமாகாண மீனவர்கள் கடலட்டைப் பண்ணைகளாலும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இதேநேரம், குறித்த சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன், சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் உயர்ஸ்தானிகருடனான உரையாடல்களை மேற்கொள்வதற்கு போதிய நேரமின்மை காரணமாக வேளையோடு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.