முல்லைத்தீவுக் கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகு வருகை அதிகரிப்பு

151 0

தற்போது இறால் பிடிப்பதற்குரிய பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே முல்லைத்தீவு மீனவர்கள் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு அத்துமீறி முல்லைத்தீவுக் கடற்பரப்பிற்குள் நுழைகின்ற இந்திய மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களுடைய இழுவைப் படகுகளையும் கைப்பற்றி கரைக்கு கொண்டுவந்தாலே தம்மால் வழக்குத் தொடரமுடியுமென முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கா.மோகனகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர்மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வாறு அத்துமீறி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களுடைய இழுவைப்படகுகளைக் கைப்பற்றி கரைக்குகெிண்டுவருவதிலேயே சிக்கலுள்ளது.

அவ்வாறு இந்திய மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களது இழுவைப்படகுகளையும் கைதுசெய்து கரைக்குக் கொண்டுவந்தால் எம்மால் வழக்குத்தொடரமுடியும்.

2017ஆம் ஆண்டு திருத்தச்சட்டத்தின்மூலம் மாவட்ட நீதிமன்றிற்கு இந்த வழக்கைக் கையாழும் அதிகாரமுள்ளது.

எனவே மாவட்டத்திலுள்ள கடற்படையினராவது இவ்வாறு அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப்படகுகளைக் கைப்பற்றி, இந்திய மீனவர்களையும் கைதுசெய்து கரைக்குக் கொண்டுவந்தாலே எம்மால் வழக்குத்தொடரமுடியும் – என்றார்.

அதேவேளை இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்.

பெப்ரவரி மாத இறுதிப்பகுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் கடற்றொழில் அமைச்சர், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், உரிய அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீன்பிடியுடன் தொடர்புடைய அனைவரும் ஒன்றுகூடி, இந்த இந்திய இழுவைப்படகுப் பிணக்கு உள்ளிட்ட மீனவர்களின் ஏனைய பிணக்குகளுக்கும் தீர்வுகாணப்படும் – என்றார்.