புற்றுநோய்க்கு எதிராக விரைவில் தடுப்பூசி: புதின் அறிவிப்பு

147 0

உலகெங்கும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்று நோய் எனப்படும்  “கேன்சர் ” (cancer).உலகம் முழுவதும் அரசு-சார்ந்த மற்றும் அரசு-சாரா பல அமைப்புகள் கேன்சருக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல கோடிகளை செலவழித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த வருடம், இங்கிலாந்து அரசு, ஜெர்மனி நாட்டை அடிப்படையாக கொண்ட பயோஎன்டெக் (BioNTech) எனும் நிறுவனத்துடன், 2030க்குள் 10 ஆயிரம் நோயாளிகள் பயன்படும் வகையில் கேன்சர் மருத்துவ ஆராய்ச்சி செய்து கொள்ள ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றினார்.

அதில் ரஷிய ஆராய்ச்சியாளர்கள் கேன்சருக்கான மருந்து கண்டுபிடிப்பில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பேசினார்.அப்போது அவர் அறிவித்ததாவது:எங்கள் ஆராய்ச்சியாளர்கள் கேன்சருக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி விட்டார்கள். தனிப்பட்ட வகையில் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அவை பொதுபயன்பாட்டுக்கு விரைவில் வரும் என நம்புகிறேன்.இவ்வாறு புதின் தெரிவித்தார்.எந்த வகை புற்று நோயை தடுக்க இந்த தடுப்பூசி செயல்படும் என்பதையும், எவ்வாறு நோயாளிகளின் உடலில் செயல்படும் எனும் விவரங்களையும் புதின் தெரிவிக்கவில்லை.ஹ்யூமன் பேபிலோமா வைரஸ் (Human Papilloma Virus) எனப்படும் வைரஸ் தாக்குதல் மூலம் பலவகையான கேன்சர் நோய் உருவாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த ஹெச்.பி.வி. தாக்குதலுக்கு எதிராக தற்போது 6 உரிமம் பெற்ற தடுப்பூசிகள் உள்ளன.கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக ரஷியா  “ஸ்புட்னிக் ” (Sputnik) எனும் தடுப்பூசியை கண்டுபிடித்து அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.