மஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற சம்பவத்தின்போது, தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாத மலையை தரிசிக்கச் சென்ற யாத்ரீகர்கள் குழுவை ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு ஹட்டன் ரயில் நிலையத்துக்கு சென்றபோது, மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இ.போ.ச பஸ்ஸை முந்திச் செல்ல பல தடவைகள் முயற்சித்த நிலையில் இ.போ.ச பஸ்ஸின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அதிலிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இளைஞர் படுகாயமடைந்ததையடுத்து, இ.போ.ச பஸ்ஸிலிருந்த ஐந்து இளைஞர்கள் கீழே இறங்கி பின்னால் வந்த தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியுள்ளனர்.
இந்த மோதல் காரணமாக மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் முற்றாக தடைப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற மஸ்கெலியா பொலிஸார் இரு பஸ்களையும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதுடன் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஐந்து இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

