கனிமொழி எம்.பி.யிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தீண்டாமை சுவரை இடித்து அகற்றிய வருவாய் துறையினர்

70 0

திருப்பூர் மாவட்டம் சேவூரில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியினர் கனிமொழி எம்.பி.யிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த சுவரை வருவாய்த் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

திமுக மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர்கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர், பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டனர்.

அப்போது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஊராட்சிக்கு உள்பட்டதேவேந்திர நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அருகேஉள்ள குடியிருப்பு பகுதியினர், நாங்கள் பயன்படுத்தக் கூடாதுஎன்பதற்காக ஊராட்சி சாலைகளை மறைத்து, தீண்டாமைச் சுவர் அமைத்துள்ளனர். சுவரை அகற்றக் கோரி முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியர்உள்ளிட்டோரிடம் மனு கொடுத்ததன் பேரில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுவரை அகற்ற உத்தரவிடப்பட்டது. ஆனாலும், அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

மனுவைப் பெற்ற எம்.பி. கனிமொழி, திருப்பூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உடனடியாக தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மற்றும் சேவூர் போலீஸார் முன்னிலையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தீண்டாமைச் சுவரை இடித்துஅகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள சுவர் இன்று இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.