பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்களையும் விசாரணைக்குட்படுத்த முடிவு

45 0

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து விற்பனை  மற்றும் கொள்வனவு நிறுவனங்களையும் விசாரிக்கும் பணியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மையில் மருந்து கொள்வனவு செய்த நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தொடர்புடையவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மேற்படி கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, பொலிஸார் சமீபத்தில் சட்டமா அதிபருடன் தங்களது விசாரணையின்போது முன்னெடுக்கப்பட்ட சட்ட ரீதியான விடயங்கள் சம்பந்தமாகவும் பகிரப்பட்டது.

ஹியுமன் இம்யூனோகுளோபுலின்  கொள்வனவின் போது நடைபெற்ற முறையகேடான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் பலர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.