யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவநாதனின் வேண்டுகோள்

58 0

இலங்கையில் இலவச கல்வியை பெற்றவர்களில் பலர் சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். வருடாந்த வருமானத்தில் ஐந்து சதவீதத்தையேனும் இவர்கள் தமது பிரதேச அபிவிருத்திக்கு வழங்கினால் நடைமுறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் . யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (05)  விஜயம் செய்வேன். என இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை   விஞ்ஞானியான கலாநிதி  சிவா சிவநாதன் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அழைப்புக்கு அமைய இலங்கைக்கு வருகை தந்துள்ள சிவா சிவநாதன் கொழும்பு – சங்ரிலா ஹோட்டலில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தி பாடசாலை கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிம் கல்வி முறைமையை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்துள்ள யோசனைகளை தெளிவுப்படுத்தினார். இதன்போது தனது சொந்த ஊரான சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இன்று சர்வதேசத்தில் பலதுறைகளில் சாதிக்கும் பல இலங்கையர்கள் இலவச கல்வியை அடிப்படையாக பெற்றவர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இலங்கையர் ஒருவருக்கு வாழ்க்கை தொடர்பில் சரியான அடித்தளம் காணப்படுமாயின் அவர் சர்வதேசத்தில் நிச்சயம் சாதிப்பார் என்பதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

நான் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டுள்ளேன். ஆரம்பக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியில் பெற்றுக்கொண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தேன். பாரிய கடின உழைப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் உயர்கல்வியை தொடர்ந்து சாதித்துள்ளேன். எனது மகள் வைத்தியர். அவரை ஒரு வைத்தியராக்குவதற்காக நான் சுமார் 01 மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளேன். அதே ஆரம்ப மருத்து படிப்பை நான் இலங்கையில் இலவசமாக பெற்றுக்கொண்டேன், ஆகவே இந்த கல்வியால் உயர்வடைந்த நான் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்ய ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்.

இலங்கையில் இலவச கல்வியை பெற்றுக்கொண்டவர்களில் பலர் இன்று சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். அவர்கள் தமது வருடாந்த வருமானத்தில் குறைந்தது  ஐந்து சதவீதத்தை தமது பிரதேச அபிவிருத்திகளுக்கு வழங்கினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தேன்.அங்கு கலாச்சாரம் சீரழிந்துள்ளது. போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. சமூக கட்டமைப்பின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அதிபரை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை சற்று மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் யாழ். இந்துக் கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்வேன் என்றார்.