எல்லை தாண்டி மீன் பிடித்த மேலும் பல தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

123 0

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.  கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை.இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல  வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை

இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளளனர்..நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுக்காட்டு துறையில் இருந்து இரண்டு பைபர் படகுகளில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள்  திடீரென இவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றானர்.