பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாஅமைப்பிற்கான நிதிஉதவி இடைநிறுத்தத்தை அவுஸ்திரேலியா கைவிடவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன.
யுஎன்ஆர்டபில்யூஏ அமைப்பின் உறுப்பினர்கள் ஹமாசுடன் இணைந்து இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டனர் என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவுஸ்திரேலியா உட்பட 9 நாடுகள் அந்த அமைப்பிற்கான நிதிஉதவியை இடைநிறுத்தியுள்ளன.
இந்த நடவடிக்கையால் பேரழிவு ஏற்படலாம் என நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலென் கிளார்க் தெரிவித்துள்ளார்.

காசாவின் மிகப்பெரிய சேவை வழங்குநராக பாலஸ்தீனிய அகதிகளிற்கான ஐநா அமைப்பு காணப்படுவதால் அந்த அமைப்பிற்கான நிதி நிறுத்தம் காரணமாக பேரழிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐநா அமைப்பில் 13000 பேர் பணியாற்றுகின்றனர் ஆனால் 13 பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் ஐநா அமைப்பிற்கான உதவியை நிறுத்தும் தீர்மானம் முற்றிலும் அளவுக்குமீறிய நடவடிக்கை எனவும் நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் 9 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் ஒருவர் உயிரிழந்துவிட்டார் இருவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுகளை கையாள்வதில் ஐநா மிகவும் தாமதமாக செயற்பட்டது இதன் காரணமாகவேஅவுஸ்திரேலியா அமெரிக்கா உட்பட நாடுகள் உதவிகளை நிறுத்தியுள்ளமை கூட்டு தண்டனை போல தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐநா அமைப்பினை நிதி அடிப்படையில்முடக்கினால் காசாவில் வசிக்கும் குடும்பங்களிற்கு அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

