சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (29) பிற்பகல் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்களும் ஒரு மாணவியும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

