யாழ். பல்கலையில் யாழ்ப்பாண சட்ட மாநாடு இன்று ஆரம்பம்

202 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் ‘யாழ்ப்பாண சட்ட மாநாடு’ இன்று (27) ஆரம்பமானது.

இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத் துறையானது 2005ஆம் ஆண்டிலிருந்து சட்டமாணிப் பட்டத்தை வழங்குகின்ற ஒரு உயர்கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது. அது, கல்விப்பணியின் பிறிதொரு மைல்கல்லாக யாழ்ப்பாணத்தில் சட்ட மாநாடு ஒன்றை நடத்த விரும்பியது.

அதற்கமைய இந்தியாவின் புகழ்பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.

‘நெருக்கடிகளுக்கூடான வழிகள்’ எனும் தொனிப்பொருளிலான இம்மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல், சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல்,   எழுத்திலுள்ள சட்டத்துக்கும் அதன் செயற்பாட்டுக்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சட்டத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகியன சுட்டிக்காட்டப்படுகின்றன.

இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் மாண்புமிகு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம், கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும்  சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

இதன்போது சிறப்பு நிகழ்வாக இலங்கையின் புகழ்பூத்த ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கனகீஸ்வரனதும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர்  சொர்ணராஜாவினதும் சிறப்புரைகள் இடம்பெறுகிறது.

‘இலங்கையில் பகிரங்க சட்டத்தின் எதிர்காலம்:  நெருக்கடிகளும் சவால்களும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இந்த மாநாட்டில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.