மழை, வெயில் காரணமாக பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்படும் என கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (20) விவசாயிகளுக்கான லேண்ட் மாஸ்ரர் இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்துக்கு 6 லேண்ட் மாஸ்ரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் 6 லேண்ட் மாஸ்ரர்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 50 வீதம் எமது அமைச்சின் ஊடாக மானியமாகவும், மிகுதி 50 வீதம் பயனாளிகளும் வழங்குகிறார்கள். 10 இலட்சம் பெறுமதியான ஒவ்வொரு லேண்ட் மாஸ்ரருக்கும் 5 இலட்சத்தை எமது அமைச்சு வழங்கியுள்ளது.
மழை, வெயில் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
மாற்று பயிர்ச்செய்கை, மரக்கறி செய்கை ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எமது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய எமது அமைச்சரும், நாங்களும் பல வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அதில் ஒரு கட்டமாக லேண்ட் மாஸ்ரர் வழங்கப்பட்டுள்ளது.
மழை, வெயில் காரணமாக விவசாயிகள் பாதிப்படைந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க துரித நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது விபரங்கள் திரட்டப்பட்டுள்ளது. விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்படும்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
விவசாயிகளுக்கான ஊக்குவிப்புக்கள் உள்ளன. அதனை நாம் ஆதரிக்க வேண்டும். அதை கொண்டு வந்த ஜனாதிபதிக்கு எமது ஆதரவு உண்டு.
எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் காலப்பகுதியில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்த நிலமையின்போது கூட்டுக்கள் தொடர்பில் ஆராய்வோம்.
அப்போது தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பதற்கான கூட்டுக்களே வரும் என நம்புகின்றோம். நாட்டு மக்கள் இன்று எதிர்பார்ப்பது தமது பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையே.
யாரும் முன்வராத நிலையில் ஜனாதிபதியாக வந்து மக்களது பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரை தேர்தலில் ஆதரிக்கக்கூடிய நிலையே வரும். அதுவே நாட்டுக்கும் நல்லது. வீட்டுக்கும் நல்லது. மக்களும் அதனையே விரும்புகின்றனர் என்றார்.




